Friday, December 10, 2010

மக்களே மக்களே..........!

                    சமீபத்தில் தீபாவளிக்கு முன்பு கோவையில் சிறுவனையும்,சிறுமியையும் கடத்தி,சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி பின்பு இருவரையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்.அந்த குற்றத்தை செய்த குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டு கொன்றதையும்,அதை கோவை மாநகரமே பட்டாசு வெடித்து கொண்டாடியதையும் மறந்திருக்க மாட்டோம்.இப்போது ஒரு செய்தி.10/12/2010 தேதியிட்ட தினமலர் இதழில் பக்கம் எட்டில் வெளியான சம்பவத்தைப் பார்ப்போம்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்தது.ஜெயக்குமார் என்பவர் தான் கொத்தனாராக பணியாற்றிய வீட்டில் உள்ள மூன்று இளம் பிஞ்சுகளை கொடூரமாக கொலை செய்துள்ளான்.மணிகண்டன் எனும் பத்து வயது சிறுவன்,சங்கீதா எனும் பனிரெண்டு வயது சிறுமி,மேலும் ஓர் சிறுமி என மூன்று பேர்.இதில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இம்மூவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2002 . குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.இந்த வழக்கு 2006 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.பின்பு 2008 ஆம் ஆண்டு குற்றவாளி பிடிபட்டான்.இரண்டு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை பார்ப்போம்.
                                                 
                                                     வீட்டிற்குள் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு,அத்துமீறி புகுந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம்  ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்றாண்டு சிறை.சம்பவத்தை மறைக்க முயற்சித்த குற்றத்திற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை.பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்றாண்டு கடுங்காவல்,கொலை செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் இருபதாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் ஐந்தாண்டு சிறை,இரண்டு சிறுமிகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்ததற்காக இரண்டு ஆயுள் தண்டனை ,பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் ஆறு ஆண்டு சிறை.கொடுஞ்செயல் புரிந்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்.கட்டத் தவறினால் ஐந்தாண்டு சிறை.இவை அனைத்தையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
                       மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் ஒரு உதாரணமே.மேலும் இதைப் போல் பல
சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த பத்தாண்டுகளில் சிறுவர்,சிறுமியர் மேலான கடத்தல்,பாலியல் துன்புறுத்தல்,கொலை போன்றவை கணிசமாக உயரத்தான் செய்துள்ளது.இவைகளைப் போன்ற எத்தனை சம்பவங்களை தமிழக மக்கள் அறிவார்கள்.இந்தக் குற்றங்கள் அனைத்தும் வட்டாரப் பத்திரிகைகளில் இரண்டு அல்லது மூன்று பத்தி செய்தியாக ஒரு ஓரத்தில் வெளியாகும்.கோவையில் நடந்த குற்றத்திற்கு 
காரணமானவர்கள் கொடூரமனவர்களே அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்களே அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.ஆனால் அவர்கள் மட்டும் பிடிபட்ட உடன் சுட்டுக் கொல்லப் பட காரணம் என்ன?இதை விட கொடுரமாக குழந்தைகளை துன்புறுத்தி கொன்றவர்கள் இதே  கோவையில் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் ஏன் உடனடியாக  சட்டத்திற்கு மீறிய வகையில் தண்டனை.இதை பட்டாசு வேறு வெடித்து கொண்டாடியிருக்கின்றனர் மக்கள்.கேட்டால் அவர்கள் நவீன நரகாசுரனாம்.அந்த குற்றவாளிகள் இருவரையும் உடனே கொல்ல வேண்டும்,அவர்கள் கொடூரர்கள்,அவர்களிடம் ஈவு,இரக்கமே காண்பிக்கக் கூடாது என்று எத்தனை போராட்டம்,கண்டனங்கள்.அதே போல் போலீசாரால் அந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்ட போது அதைக் கொண்டாடி மகிழ்ந்ததென்ன?

                              அய்யா,பொதுமக்களே இதுவரை எத்தனை எத்தனையோ குழந்தைகள் கொடூரமான முறையிலும், மர்மமான முறையிலும் இறந்துள்ளனர்.அப்போதெல்லாம் எங்கே அய்யா சென்றிருந்தீர்கள்?ஏன் இப்போது மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம்,ஆரவாரம்.இத்தனை நாட்கள் இல்லாத உணர்ச்சி இப்போது மட்டும் எப்படி பொத்துக் கொண்டு எங்கிருந்து வந்ததது.மேலே நீங்கள் படித்த செய்தி வந்த அதே தினமலரில் தலைப்பு செய்தி என்னவென்று தெரியுமா?கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இளம் பிஞ்சு மாணவர்களை தோல் கன்னிப் போய்,உள் காயம் ஏற்படுத்து மளவிற்கு கைதிகளை படுக்க வைத்து பின்பக்கமாக லத்தி சார்ஜ் செய்வார்களே,அது போல் மிருகத் தனமாக அடித்து மிதித்துள்ளர்.இது முதல் பக்கத்தில் புகைப் படத்துடன் வந்துள்ளது.அதை பார்ப்பவர்கள் மனதில் கண்டிப்பாக வேதனையை உண்டு பண்ணும்.அந்த அளவிற்கு கொடிய மிருகத்தன செயல் அது.அந்த ஆசிரியர் எந்தளவிற்கு கொடிய மனம் படைத்தவராயிருப்பர் என்பதற்கு இது ஒரு உதாரணமே போதும்.அவரும் அந்த இரு குற்றவாளிகளைப் போலவே கொடூரமானவர்.ஆனால் இந்த சம்பவத்திற்கு அந்த குழந்தைகளின் பெற்றோரைத் தவிர வேறு யாரும் எந்த வித உணர்ச்சியையும் காட்டவில்லை.யார் பெற்ற பிள்ளை எப்படி போனால் நமெக்கென்ன என்ற நிலையில் பத்தோடு பதினொன்றாக இந்த செய்தியையும் படித்து விட்டு அடுத்த வேலையை கவனிக்க மக்கள் சென்று விட்டனர்.

                                              மக்களே இப்போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் எங்கே ஊர் மேயப் போயுள்ளது.அன்று மட்டும் அதனை வேகம் காட்டியவர்கள் இன்று எந்த சத்தமுமே இல்லாமல் இருப்பது ஏன்?பத்திரிகைகளும் ஓர் காரணம்.கோவையில் அந்த இரு குழந்தைகள் இறந்ததை விட கொடூரமான முறையில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.அப்போதெல்லாம் அதற்க்கு உரிய வகையில் முக்கியத்துவம் அளிக்காமல் பேப்பரின் ஏதோ ஒரு மூலையில் பெட்டி செய்தி போடுவது போல் போட்டு விட்டு,இதற்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்தது ஏன்?அந்த இரு சிறார்கள் காணாமல் போனதிலிருந்து அந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்படும் வரையில் 
அனைத்து பத்திரிகைகளையும் பார்த்தீர்கள் என்றால் எத்தனை எத்தனை செய்திகள்.இரண்டு,மூன்று பக்கம் முழுதாக அந்த செய்திகளும்,அவை தொடர்பான புகைப்படங்களும் என்று அனைத்து பத்திரிகைகளும் முந்தோ முந்தென்று செய்திகளை அள்ளி வழங்கின.அதே போல் மக்களையும் அந்த செய்திகள் மூலம் உசுப்பேற்றி விட மறக்கவில்லை.மக்களை தூண்டி விட்டு பட்டாசு வெடிக்க செய்ததின் மூலம் தங்களின் காரியத்திற்கு புண்ணியம் தேடிக் கொண்டது மட்டுமல்லாது,மக்களின் பாராட்டையும் பெற்று நல்ல பெயர் வாங்கிக் கொண்டனர் போலீசார்.

                              எத்தனையோ செய்திகள் பத்திரிகைகளில் பெட்டி செய்தியாகக் கூட வராமல் அனைவரும் அறியாமலே போனதுண்டு.சாவிலும் கூட ஒருவர் பணம் படைத்தவராக இருந்தால் மட்டுமே நீதி கிடைக்கும்.இல்லையென்றால் சீண்டுவதற்கு கூட ஆள் இருக்காது என்பதே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.இது வரை பலியானது அனைத்துமே ஏழைக் குழந்தைகள்.அதனால் அவைகள் வெளிச்சத்திற்கு வராமலே போய் விட்டன.பணம் நீதியையும் ஏமாற்றி,மக்களையும் முட்டாளாகி விட்டது.மக்களே நீங்கள் உண்மையிலேயே உணர்ச்சித் துடிப்புள்ளவர்கள் ஆனால் கும்பகோணத்தில் தீயில் கருகி இறந்த பிஞ்சுகளுக்காக துடித்திருக்க வேண்டும்,தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் நடந்த போது துடித்திருக்க வேண்டும்,மேலும் வேறு பல குழந்தைகள் கொல்லப்பட்ட செய்திகளை அறிந்த போது துடித்திருக்க வேண்டும்.அப்போதெல்லாம் துடிக்காமல் இந்த சம்பவத்திற்கு மட்டும் அதிகப்படியாக துடித்தது ஏன்?இவைகளை  போல் அனைத்திற்கும் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருந்தால் நீங்கள் உண்மையான மக்கள்.
                                        
                                      கொலைகாரர்களை கொல்ல வேண்டும்,அவர்களை உயிரோடு விட்டு வைப்பது வீண்,அரசாங்க பணம் வீண்,அவர்களை உடனடியாக போட்டுத் தள்ள வேண்டும்,சவூதி நாடுகளைப் போல சட்டம் வர வேண்டும்,அரசாங்கமும் போலீசாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் குற்றவாளிகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்,அனைத்தும் முறைப்படிதான் நடக்க வேண்டும் என்று சொன்னவர்களையும் தாக்க சென்றவர்கள்.இவர்களைப் போன்ற திடீர் 
உணர்ச்சி வசப்படுபவர்கள் அனைவரும் இது போன்ற ஓவ்வொரு குற்றத்திற்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக செயல் படுபவர்களா என்றால் கிடையாது.சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கபெற்று அதன் மூலம் அவர்கள் கொள்ளப்பட்டு அதை இவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.சட்டத்திற்கு புறம்பான வழியில் கொல்லப்பட்டதை கொண்டாடியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்த உணர்ச்சியாளர்கள் அனைவரும் சட்டத்தை புறக்கணித்து இதை வரவேற்றுள்ளனர்.சட்டத்தை நீங்கள் இன்று உதாசீனப்படுத்தினால் நாளை உங்களுக்கு பிரச்சினை எனும் போது சட்டம் உங்களை உதாசீனப்படுத்தும்.

                      குழந்தைகளுக்கெதிரான அனைத்து குற்றங்களையும் எதிர்க்க வேண்டும்..அது ஏழையோ,பணக்காரனோ அவைகளை மறந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.நியாயமான வழியில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.அதுவே மக்களின் கடமை.உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சட்டத்தை மதிக்காமல் போராடுவதல்ல.

Sunday, December 5, 2010

கை கொடு.......

சன் டிவி,ராஜ் டிவி,விஜய் டிவி
ஜெயா டிவி,கலைஞர் டிவி,
மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,
சூப்பர் சிங்கர்,மன்மதன் அம்பு
பார்த்துக் கொண்டிருந்த போது
இலங்கையில் தமிழச்சிகள்
வன்புணர்ச்சிக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர்,
ராவணன் ஆண்டாலும்
ராஜபக்சே ஆண்டாலும்
நமெக்கென்ன கவலை என்று
தொடர் நாடகங்களில்
முளுகியிருந்தோம்.
தொலைக்காட்சி நாடகங்களில் 
ஒருத்திக்கு துன்பமென்றால்
துடிக்குது நம் மனது.
கண்ணெதிரே பல ஆயிரம்
பேர்,கண்டு கொள்ளவில்லை
 நம் மனது.
 கமல்,ரஜினி,
விஜய்,விக்ரம்,
அஜித்,சூர்யா,
த்ரிஷா,தமன்னா
அனுஷ்கா,ஷ்ரேயா
தவிர யார் செத்தால்
நமெக்கென்ன.
தன்னினம் அழிவதை
தானே வேடிக்கை பார்த்த
ஓரினம் நாமன்றோ தமிழா.
நாம் அனைவரும்
புத்திசாலிகள்தான் தனித்தனியே,
மொத்தமாக முட்டாள்கள்.
அதை கண்கூடாக பார்க்கிறோம்
தமிழகத்தில்.
புத்த மதம் தழுவியவர்கள் 
இன்று புலியாய் பாய்கிறார்கள்.
வீரன் சொறிந்த மறத் தமிழன்
இன்று மானம் கெட்டதேனோ?
முறத்தால் புலியை விரட்டினாள்
வீரத் தமிழச்சி அன்று.
வெறும் எலியைக் கூட
விரட்ட முடியாதவளாக்கி
விட்டனர் இலங்கையில் இன்று.

த்ரிஷாவும்,அனுஷ்காவும்
வரும் போது இமை மூடாமல் பார்க்கிறோம்,
இலங்கைத் தமிழர் இறப்பதை பார்த்தால்
சேனலை மாற்றுகிறோம்.
நாமல்லவா உண்மைத் தமிழர்.
நம் சகோதர,சகோதரிகள் இறந்து
கொண்டிருக்கையில்,நாம்
இந்த வருட சிறந்த
நடிக,நடிகையர் யாரென்று
விசனப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழா........
நண்பா............
மைனா,
வ குவாட்டர் கட்டிங்,
மன்மதன் அம்பு,
எந்திரன்
இவற்றைத் தவிரவும்
இவற்றை எல்லாம் தாண்டியதும்
நம் வாழ்க்கை என்று உணர்வாயா?
நம் தமிழச்சிகள்
கற்பழித்துக் கொல்லப் பட்டுக்
கொண்டிருக்கும் போது
நீ கதை பேசி காலத்தை
போக்கிக் கொண்டிருக்கிறாய்
என்பதை உணர்வாயோ.........
நாளை வரலாறு
நமேக்கேதிரே திரும்பும்
என்பதையும் உணர்வாயோ........
பத்து வீடு தள்ளிதான்
தீஎரிந்து கொண்டிருக்கிறது.
பத்து நிமிடம் கூட ஆகாது
நம் வீட்டில் பற்றி எரிய.
வெட்டிக்கதை,பழங்கதை
பேசுவதை விட்டு
நிகழ்கதை உணர்.
நாம் அனுபவித்ததில்லை
சொந்த ஊரில்,சொந்த இடத்தில
அகதிகளாக வாழ்வதை.
அனுபவித்துக் கொண்டிருக்கிறது
நம் இனம்.
இலங்கையிலே இனக்கலவரம்
இங்கோ பணக்கலவரம் .
நாம் உதவாமல்
நம்மினத்திற்கு வேறொருவர்
உதவார்.
உன் உயிரைக் கொடுக்க வேண்டாம்
உன் குரலை மட்டுமாவது கொடு
போதும்.
அனைவர் குரலும் சேர்ந்தால்
விண்ணை முட்டும்
மண்ணை புரட்டும்.
உதவு.............
நீ
உதவ மறுத்தால்
உனக்குதவி மறுக்கப்படும்.
அழிவது நம்மினம்
வீழ்வது நம்மினம்
இனியும் வேடிக்கை
என்றால்,
தமிழா,
உன் அளவிற்க் கேற்றாபோல்
இடமுண்டு இடுகாட்டில்..........

Friday, December 3, 2010

ஈழ சகோதரிகளுக்கு............

ஆர்ப்பரித்து  அலையடிக்கும்  நீலக்கடல்  
தென்னை  மர  ஓலை  சத்தத்தோடு 
சேர்ந்து  இசைக்கும்  ஊர்க்குருவி
இதமான  காற்றோடு மணல் ஈரம்............

இத்தனையும்  ரசித்திட  இன்றைக்கு 
மனமில்லை 
இனி  என்றைக்குமே
மனமில்லை..............

முள்ளில்  வீழ்ந்த  சேலை  போல 
கயவர்களின்  கண்களில்  வீழ்ந்து
வன்முறையாய்  வன்புணர்ச்சிக்கு
ஆட்பட்டு  கொண்டிருக்கிறேன்..............  

 குண்டடித்தால்  பரவாயில்லை
சித்ரவதித்தால்  பரவாயில்லை
வெட்டினாலும்,குத்தினாலும்  பரவாயில்லை
ஆனால்,மாட்டிக்கொண்டது  காம  ஆயுதத்தில்..........

உடல்  நடுங்கிட,உள்ளம்  நொறுங்கிட
கைகள்  தளர்ந்தன,கால்கள்  துவண்டன
பேச்சு  இழுக்கிறது,மூச்சு  இழக்கிறது
இதயமே  நீ  நின்று  விடு ................

மரணப்படுக்கையில்  கூட
உணர்ந்ததில்லை  உயிர்வழியை
உணர்ந்தேன்  இன்று  இந்த
மணல்  படுக்கையில்..............

ஒன்றும்  அறியா  என்னுடலை
இன்று  நாராய்   ஆக்கி
சீரழித்து,சிறகொடித்து
உயிரேடுத்துக்கொண்டிருக்கிறார்கள்............

உடலிச்சை  தீர்ந்ததும்
மன  இச்சை  தீர்க்க
கொடூரமாய்  கொன்று விடுவரே
முன்னமே உயிர் போன என்னுடலை............

நேற்றொருத்தி,இன்று  நான்
நாளை  யாரோ,யாரறிவார்
தெரிந்திட்டால்  முடித்திடலாம்
வாழ்க்கையை  முன்னே.............

கண்ணெதிரே  கணவன்
கை  கட்டி,வாய்  பொத்தி
துப்பாக்கி  முனையில்
துயரமாய்  பார்த்தவாறு ..............

இரட்டைப்  படை  வயது  வந்தால்
இலக்காகிடுவோம்   நாங்கள்
சிங்கள  காடைகளுக்கு
ஆம்,சிங்கள  காடைகளுக்கு...............

புத்தர்  பூமியில்
புலியாகப்  போனான் அண்ணன் 
பலியாகிப்  போனான்  வன்னியில்,
நாங்கள்  கண்ணீரில் .................


தங்கை  வயது  பதினான்கு
வயிற்றில்  மாதம்  ஆறு
யார்  சொல்வர்
அதன்  அப்பன்  யாரென்று..............

தாயொரு  முகாம்
தந்தையொரு  முகாம்
அடிபட்டு  வதைபட்டு
நித்தமும்  துயருற்று  ...............


உறவினரெல்லாம்  ஓரிடத்தில்
அன்று,
உடல்கள்  எல்லாம்  எவ்விடத்தில்
இன்று .............

உள்   நாட்டவர்   உதவினால்
உயிரில்லை
வெளிநாட்டவர்  உதவியிலும்
வெளிச்சமில்லை............

எம்  பூர்வ  ஜென்ம
ஊரென்று  கேட்டோம்,
தமிழ்நாடு
உதவவேயில்லை ..................

சிங்களவன்  வந்தான்
சீனன்  வந்தான்
உடலைக்  கேட்டான்
நாங்கள்  உயிரை  விட்டோம் .............



வயதானவரென்றால்  முகாம்
ஆண்களென்றால்  கொலை
பெண்களென்றால்  புணர்ச்சி
இதுதான் இன்று எம் நிலை .............


முன்பு துரத்தினர்,பிடுங்கினர்
பின்பு அடித்தனர்,கொன்றனர்
கூட்டமாய் அடைத்தனர்
சலிப்படைந்தனர் போலும்................

மொத்தத்தில் முற்றிலும்
புதிதாய் யோசித்தனர்
அனைவரையும் புணர்ந்தனர்
தலைமுறையை தடம் மாற்றினர்....................

தமிழச்சி வயிற்றில் சீனன் குழந்தை
தமிழச்சி வயிற்றில் சிங்களவன் குழந்தை
தமிழ்ச் சீன,தமிழ் சிங்கள
கலப்பை கண்டறிந்தனர் .................



தமிழ் மரபை அளிக்க
ஒடுக்க,மறைக்க
புதியதோர் போர்முறையாம்
புதியதோர் தந்திரமாம்................ 

இன்னும் இன்னும்
எம்மக்கள் படும்பாடு
சொல்லவே முடியாது
சொன்னாலும் தீராது.........

உதவிக்களைக்கவும்  ஒருவருமில்லை
எம் தலைவனும் எம்மிடமில்லை
திரைப்படம்தான்
முக்கியமாம்
தங்கத் தமிழ்நாட்டிற்கு..............

மீண்டும் வீறு கொண்டேளுவோம்
அனைவரும் இறந்தாலும்
இறவாமல் காப்போம்
யாம் கொண்ட தமிழை...........

எங்கள் சிதையிலும்
பாதி  உயிருண்டு
அவை கொண்டு இனம்  காப்போம்
மீதி உயிர் காப்போம் .................



என்னுயிர் போனாலும்
மானம்  காத்திட மக்களுண்டு
பயந்திடப் பயமெதற்கு
பயந்தால் ஜெயமேதற்கு...........


போகிறேன் நான் வீர மங்கையாய் ...........

Wednesday, December 1, 2010

அம்பானி க்ரூப்பும் சினேகா இடுப்பும்....!

.           அம்பானி க்ரூபபுக்கும் சினேகா இடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கறீர்களா?
இருக்கிறது.முதலில் அம்பானியை பார்ப்போம்.இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி தனது காதல் மனைவி திருமதி நீதா அமபானிக்கு காதல் பரிசாக தருவதற்கு ஒரு பெரிய காதல் கோட்டையை மும்பை மாநகரில் கட்டியுள்ளார்.அதன் பெயர் அன்டிலியா.4532 சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 27 மாடிகளுடன் அமைந்துள்ளது.160 கார்களை நிறுத்தும் வசதி படைத்த பெரிய தளம்,3 ஹெலிகாப்டர்களை மாடியில் நிறுத்த வசதியாக ஹெலிபேட்,தனியாக வாகனங்களை பராமரிப்பதற்கென்றே ஒரு தளம்,9 எலிவேட்டர்கள்,நீச்சல் குளங்கள்,மூன்றாம் மாடியில் 50 பேர் அமர்ந்து பார்க்கும் பெரிய திரையரங்கம்,யோகாசன மையம்,உடற்பயிற்சி நிலையம்,மூன்று மாடிகளில் தொங்கும் தோட்டம்,பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தை போல,மற்றும் முழுவதும் பனிக்கட்டிகளால் ஆன ஒரு தளம்,இதில் நுழைந்தால் நீங்கள் இமயத்திலோ  அல்லது ஆல்ப்ஸ் மலையிலோ பனியில் இருப்பது போல் உணர்வீர்கள்.இப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மாளிகையை திரு முகேஷ் அம்பானி அவர்கள் மும்பையில் எழுப்பியுள்ளார்.இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 8000 கோடி ஆகும்.இம்மாளிகையில் முகேஷ் அம்பானி அவரது மனைவி மற்றும் இரு மகன்கள்,ஒரு மகள் என மொத்தம் ஐந்தே பேர் மட்டும் வசிக்க போகிறார்கள்.இந்த வீட்டில் பணி புரிய மட்டுமே அறுநூறு பேர் தேவைப்படுவார்கள்.ஐந்து பேர் வசிக்க இப்படி ஒரு குபேர அரண்மனை!.

முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகை
                                                                    இதில் ஒரு தளம் முற்றிலும் தங்கத்தாலேயே இழைக்கப்பட்டுள்ளது.மேலும் விருந்தினருக்கென்று ஒரு தளம்.இதைப் போல ஒரு கோடீஸ்வர வீடு இந்தியாவில் இது வரை இருந்ததில்லை.இனியும் இதை போல ஒரு மாளிகை அமையுமா என்பதும் சந்தேகம்.வெளி நாடுகளை போல ஆடம்பரமான முறையில் அமைந்துள்ளது இந்த வீடு இல்லையில்லை மாளிகை அதுவும் இல்லை அரண்மனை.இதில் உள்ள முக்கிய விஷயம் தெரியுமா?திரு முகேஷ் அம்பானி அவர்கள் தனது வீட்டில் முதல் மாத மின் கட்டணமாக எவ்வளவு செலுத்தியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.அசர வேண்டாம் அதிகமில்லை கம்மிதான்.சுமார் எழுபது லச்சது அறுபத்தி ஒன்பதாயிரத்து நானுற்று எம்பத்தி எட்டு ரூபாய் மட்டுமே.........
அதாவது எண்ணில் சொன்னால் 70,69488 ...!
                                                                                  நம் தமிழ்நாட்டு மின்சாரத்தை எல்லாம் எடுத்து உபயோகப்படுத்தியிருப்பாரோ என்று என்ன வைக்கக் கூடிய அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் மின்சாரத்தை.இந்த தொகை நம் சாதாரண தமிழ்நாட்டு குடுமகனிடம் இருந்திருந்தால் அதை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து வாழ் நாள் முழுவதும் சாப்பிடுவார்கள்..
சினேகா மற்றும் அவரது இடுப்பை கிள்ளிய வாலிபர்(தாடியுடன் இருப்பவர்)
                              ஆனால் நடந்தது என்ன?.இந்த செய்தி பத்திரிகையில் வெளியான அன்று மற்றொரு சூடான சுவையான சம்பவமும் நம் தங்கத் திரு தமிழ்நாட்டில் நடந்தேறியது.தமிழ்நாடு ஈரோடு மாவட்டம்,பெருந்துறையில் உள்ள ஈமு கோழி இறைச்சி உணவகத்தை திறந்து வைத்து பின்னர் ஈமு கோழி பண்ணையை பார்வையிட சென்ற நமது தமிழ்நாட்டின் மிகபெரும் கனவுத் தாரகையும்,தேச முன்னேற்றத்திற்காக பாடுபடும்,ஏழை எளிய மக்களின் ஊக்க சக்தியும் ஆன திரைப்பட நடிகை இரண்டாம் சாவித்திரி சொப்பன சுந்தரி''ஸ்னேஹா'' வின் மத்தியப் பிரதேசமான இடுப்பு கிள்ளப்பட்ட நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது.அட இது என்னடா நம் குலக் கொளுந்துக்கு வந்த சோதனை என்றெண்ணி நடந்ததை மேலும் விரிவாக படிப்போம் என படித்தபோதுதான் தெரிந்தது.குலக் கொழுந்து சினேகா அவர்கள் மக்களுடன் மக்களாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி நம் மங்கயர்க்கரசி சிநேகாளின் மேல் உரசிக்க் கொண்டும்,இடித்துக் கொண்டும் இருந்திருக்கிறார்.திடீரென்று சமயம் அழகாக வாய்த்தது.கிள்ளினாரே ஒரு கிள்ளு நறுக்கென்று.என்ன ஒரு தைரியம்,பின்பு என்ன.அஜித்,விக்ரம்,விஜய்,கமல் போன்றோரின் பொற்க்கரங்கள் கிள்ளிய அந்த அழகு இடுப்பை,ஏதோ ஒரு நாரக்கை கிள்ளினால் கோபம் வராதோ?.ஆனால் அந்த சமயத்திலும் பொறுமை காத்தார் நம் பொன்னகை இளவரசி சினேகா.
                                                            தனது இடுப்பை கிள்ளிய அந்த வாலிபரை அவர் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வெறும் திட்டியதோடு காவல் துறையிடம் புகார் அளிக்காமல் விட்டு விட்டார்.இந்த சம்பவம் படத்துடன் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.அதில் சினேகா மற்றும் அவர் இடுப்பை கிள்ளிய தாடிக்கார வாலிபருடன் கோபமாக பேசுவது போல் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.அதில் சினேகாவின் இடுப்பை கிள்ளிய அந்த நபர்,சினேகா திட்டுவதை கேட்டு கொண்டு சிரித்து கொண்டுள்ளார்.அவர் அதை பெரிதாவே எடுத்து கொள்ளவில்லை போலிருக்கிறது.இந்த சம்பவமும் நடிகை சிநேகாவிற்கு புதிய விஷயம் அல்ல.ஏற்கனவே திருச்சியில் துணிக் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது இதே போல் அவரது இடுப்பு கிள்ளப் பட்டது.புன்னகை இளவரசி சிநேகாவிற்கு மட்டும்தான் இதுபோல நடக்கிறது என்றெண்ணி விடாதீர்கள்.நமது நாளைய நம்பிக்கை நட்சத்திரம்,மானையும் மயிலையும் ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் நமீதா மற்றும் அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலி ஆகியோருக்கும் வேறு பல நடிகைகளுக்கும் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
                        நமது நாட்டில் வேலை வாய்ப்பின்மை,விலைவாசி உயர்வு,அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம்,லஞ்ச லாவண்யம்,ஊழல்,கொலை,கொள்ளை,தொடர் மின்வெட்டு  போன்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் நமது வாலிபர்களுக்கு நடிகைகளின் அங்கங்களை கிள்ளுவதும்,உரசுவதும்,கனவுலகில் அவர்களுடன் சல்லாபிப்பதும்தான் தற்போதைய முக்கிய பிரச்சினை போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அப்துல் கலாம் கனவு காணுங்கள்,கனவு காணுங்கள் என்று அடிக்கடிசொல்வதை இவர்களை போல இளைஞர்கள் தவறாக எண்ணி விடுகிறார்களோ என்னவோ?.அற்ப கிளுகிளுப்பிற்கு ஆசைப்பட்டு கொண்டு ஏன்தான் இதுபோல் தவறான பாதையில் செல்கிறார்களோ.இவர்களை போன்றவர்களின் மனம் முழுவதும் அசின்,த்ரிஷா,ஷ்ரேயா,நமீதாக்களால் நிரம்பபட்டுள்ளது.அதனால் தான் இவ்வாறு நடிகைகளின் மேல் ஆசைப்பட்டு,அவர்களால் கவரப்பட்டு தங்கள் சுய கௌரவத்தை இழந்து அனைவர் முன்னும் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை.
                                                      தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சினிமாவினால் மிக மோசமான ஒரு வழியில் சென்று கொண்டிருக்கின்றனர்.இன்றைக்கு வெளி வரும் பாதி திரைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதையை நோக்கி செலுத்தி கொண்டிருக்கிறது.படங்களில் வரும் கதாநாயகர்கள் அனைவருமே வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டும்,சரக்கடிதுக் கொண்டும்,பள்ளிக்கு செல்லும் சிறு பெண்களை காதலித்துக் கொண்டும்,தாய் தந்தை பேச்சை கேட்காமல் ஊர் மேய்ந்து கொண்டும் உள்ளதாகவே காட்டுகிறார்கள்.இதனை பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் இவைகளை பதிய வைப்பதன் மூலம் ஒரு இளம் தலைமுறையே கெட்டு குட்டி சுவராக சீரழிந்து வருகிறது.அவனவன் இன்றைக்கு கம்ப்யூட்டர்,சாப்ட்வேர்,அமெரிக்கா,ஐரோப்பா,
மாதம் ஒரு லட்சம்,இரண்டு லட்சம் என காலில் ரெக்கை கட்டியது போல் ஓடி கொண்டிருக்க,இவர்களை போன்றவர்களோ சினேகாவின் இடுப்பு கிள்ளுவதற்கு உகந்ததா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும் தற்போதைய படங்களில் பெண்களை கரெக்ட் செய்வது எப்படி,பரிட்சையில் பிட் அடிப்பது எப்படி,பெற்றோரை சுலபமாக ஏமாற்றுவது எப்படி,குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி மேலும் இவளை எப்படி கூட்டிக் கொண்டு ஓட வேண்டும்,அடுத்தவன் மனை கவர்வது.....என்று அனைத்தையும் கற்றுத தருகிறார்கள்.மேலும் சினிமா போதாதென்று இப்போது சின்னத்திரையும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை மாக்களாகி வருகிறது.
                              இவைகளை பார்த்து கெட்டு அழிந்து மனம் சீரழிந்தவன் சினேகா இடுப்பை கிள்ளாமல்,தமிழ்நாட்டு தண்ணீர் தட்டுபாட்டயா தீர்த்து விட போகிறான்.சிலர் சொல்லலாம்,நடிகைகள் ஏன் அவ்வாறு தங்கள் உணர்ச்சிகளை தூண்டுவது போல் பொது இடங்களுக்கு வர வேண்டும்.அப்படி வந்தால் அப்படித்தான் கிள்ளுவோம் என்று.எங்கள் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டு பின்பு குய்யோ முறையோ என்றால் என்ன செய்வது என்றும் சொல்கிறார்கள்.ஒழுக்கமாக படித்து முடித்து ஒழுங்கான வேலைக்கு சென்றிருந்தால்,பெண்களின் பாகங்களை ஏன் தடவிக் கொண்டிருக்க போகிறீர்கள்.ஒரு வேலையும் இல்லாது வெட்டி வேலையை மட்டுமே கொண்டிருக்கும் காரணத்தால் தானே இம்மாதிரி வேலைகளுக்கு மனது அலைகிறது.நடிக,நடிகையர் வரும் இடங்களுக்கு சென்று அவர்களை வாயில் ஈ போவது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டு,பொழுதை போக்கி கொண்டு இருப்பவர்கள் இடுப்பை கிள்ளாமல்,அடுப்பை பற்ற வைத்து சமையலா செய்ய முடியும்.அதே போல் செய்வதையும் செய்து விட்டு அவர்கள் பார்பதற்கு கவர்ச்சியாக இருந்தார்கள்,உணர்ச்சிகளை தூண்டினார்கள்,மனதை சஞ்சலப் படுத்தினார்கள் என்று மொக்கை காரணம் கூறுபவர்களுக்கு......இதெல்லாம் நீங்கள் செய்யவில்லை,நீங்கள் பேசவில்லை....நீங்கள் இத்தனை நாள் பார்த்த சினிமா,டிவி போன்றவைகள்தான் செய்ய வைத்துள்ளது.
                                                                             கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் உங்கள் மனதில் ஊடுருவி விஷ விதைகளை தூவி தூபமிட்டு சமய சந்தர்பம் வைக்கும் போது உங்களை அத்தகைய காரியங்களில் ஈடுபட வைத்துள்ளது.அவைகள்தான் உங்கள் உணர்ச்சிகளை தூண்டி விட்டுள்ளது,அவைகள்தான் உங்களை செயலில் இறங்கவைக்கிறது.ஆகவே செய்வதையும் செய்து விட்டு மற்றவர்களின்மேல் பலியை போட வேண்டாம்.தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக அந்தப் படங்களில் வன்முறை,கட்டவிழ்த்த கவர்ச்சி,ஆபாசம்,பாலியல் செய்கைகள் போன்றவற்றை உங்கள் மேல் திணித்து ரசிக்க வைத்து லாபம் அடைகின்றனர்.சாதாரண ரசிகனும் அவைகளை பார்த்து பார்த்து மனதில் ஏற்றி சமயம் வரும் போது செயலில் நிறைவேற்றுகின்றான்.
இதுவே நீங்கள் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தால் இந்த மாதிரி வேலைகளுக்கு ஏது நேரம்.உங்கள் வேலையை கவனிக்கவே நேரம் இல்லாத போது,சினேகா,நமீதாவையா போய் பார்த்து கொண்டிருப்பீர்கள்.ஒன்றும் இல்லாமல் சும்மா இருக்கும் போதுதான் இம்மாதிரி வேளைகளில் மனம் ஈடுபடும்.
                                      முகேஷ் அம்பானி அவர்கள் இம்மாதிரி சிறு பிள்ளை விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால் சுமார் எட்டாயிரம் கோடியில் வீட்டை கட்டியிருக்க முடியுமா?அவர் அவ்வளவு தொகையில் ஐந்தே பேர் வசிக்க பெரிய அரண்மனையை கட்டி குடி புகுந்து கொண்டிருக்கும் வேளையில்,நமது ஆட்களோ இங்கு சினேகாவின் இடுப்பில் குடி புகுந்து கொண்டிருக்கிறார்கள்.மகாத்மா காந்தி,நேரு,காமராஜர்,சுபாஷ் சந்திர போஸ்,ராஜாஜி,பகத் சிங்,திருப்பூர் கோடி காத்த குமரன்,பாலா கங்காதர திலகர் போன்ற தலைவர்கள் இம்மாதிரி சில்மிச வேளைகளில் ஈடுபட்டிருந்தால் சுதந்திரம் எனும் சொல்லை நாம் அப்துல் கலாமின் கனவுகளில் மட்டுமே காண வேண்டியிருக்கும்.இந்த சில்லறை வேலைகளை செய்ய போயிருந்தால் முகேஷ் அம்பானி இன்று அவர் அரண்மனை கட்டியிருக்கும் அதே மும்பையில் குடிசை வாசியாகதான் இருந்திருப்பார்.அவர் தந்தை பெரிய கோடீஸ்வரர் அதனால் அவரும் பெரிய பணக்காரர் என்றால்,அவர் தந்தை சேர்த்து வைத்ததை ஊதாரித்தனமாக செலவழிக்காமல் கட்டி காத்து அதை மென் மேலும் பெருக்கி,இன்று அதை மாபெரும் மூலதனமாக்கி காட்டியுள்ளார்.அவர் இதை போல வேளைகளில் ஈடுபட்டிருந்தால் எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன பயன்?அது வேட்டியாகதான்   போயிருக்கும்.....அதை போலவே இடுப்பை கிள்ளுபவர்கள்,முதலில் சுய கட்டு பாடு,தனி மனித ஒழுக்கம் இல்லாமல் பணம் சம்பாதித்து என்ன பயன்?
                                                         கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னதை நடிகைகளுடன் சல்லாபிப்பதாக கனவு காணும் இத்தகைய நபர்கள்,கலாம் காணச் சொன்ன கனவு நம்முடைய எதிர்காலத்தை பற்றி,வாழ்க்கையை பற்றி என்று அறியாத இவர்கள்,என்ன அறிவுரை சொன்னாலும்,எப்படி வாய் கிழிய பேசினாலும்,எத்தனை பெரியார்கள் வந்தாலும்,...............................மேலும் அடுத்தது யாருடைய இடுப்பு,த்ரிஷா இடுப்பா?தமன்னா இடுப்பா? இல்லை நயன்தாரா இடுப்பா? என்று தான் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.