Friday, December 3, 2010

ஈழ சகோதரிகளுக்கு............

ஆர்ப்பரித்து  அலையடிக்கும்  நீலக்கடல்  
தென்னை  மர  ஓலை  சத்தத்தோடு 
சேர்ந்து  இசைக்கும்  ஊர்க்குருவி
இதமான  காற்றோடு மணல் ஈரம்............

இத்தனையும்  ரசித்திட  இன்றைக்கு 
மனமில்லை 
இனி  என்றைக்குமே
மனமில்லை..............

முள்ளில்  வீழ்ந்த  சேலை  போல 
கயவர்களின்  கண்களில்  வீழ்ந்து
வன்முறையாய்  வன்புணர்ச்சிக்கு
ஆட்பட்டு  கொண்டிருக்கிறேன்..............  

 குண்டடித்தால்  பரவாயில்லை
சித்ரவதித்தால்  பரவாயில்லை
வெட்டினாலும்,குத்தினாலும்  பரவாயில்லை
ஆனால்,மாட்டிக்கொண்டது  காம  ஆயுதத்தில்..........

உடல்  நடுங்கிட,உள்ளம்  நொறுங்கிட
கைகள்  தளர்ந்தன,கால்கள்  துவண்டன
பேச்சு  இழுக்கிறது,மூச்சு  இழக்கிறது
இதயமே  நீ  நின்று  விடு ................

மரணப்படுக்கையில்  கூட
உணர்ந்ததில்லை  உயிர்வழியை
உணர்ந்தேன்  இன்று  இந்த
மணல்  படுக்கையில்..............

ஒன்றும்  அறியா  என்னுடலை
இன்று  நாராய்   ஆக்கி
சீரழித்து,சிறகொடித்து
உயிரேடுத்துக்கொண்டிருக்கிறார்கள்............

உடலிச்சை  தீர்ந்ததும்
மன  இச்சை  தீர்க்க
கொடூரமாய்  கொன்று விடுவரே
முன்னமே உயிர் போன என்னுடலை............

நேற்றொருத்தி,இன்று  நான்
நாளை  யாரோ,யாரறிவார்
தெரிந்திட்டால்  முடித்திடலாம்
வாழ்க்கையை  முன்னே.............

கண்ணெதிரே  கணவன்
கை  கட்டி,வாய்  பொத்தி
துப்பாக்கி  முனையில்
துயரமாய்  பார்த்தவாறு ..............

இரட்டைப்  படை  வயது  வந்தால்
இலக்காகிடுவோம்   நாங்கள்
சிங்கள  காடைகளுக்கு
ஆம்,சிங்கள  காடைகளுக்கு...............

புத்தர்  பூமியில்
புலியாகப்  போனான் அண்ணன் 
பலியாகிப்  போனான்  வன்னியில்,
நாங்கள்  கண்ணீரில் .................


தங்கை  வயது  பதினான்கு
வயிற்றில்  மாதம்  ஆறு
யார்  சொல்வர்
அதன்  அப்பன்  யாரென்று..............

தாயொரு  முகாம்
தந்தையொரு  முகாம்
அடிபட்டு  வதைபட்டு
நித்தமும்  துயருற்று  ...............


உறவினரெல்லாம்  ஓரிடத்தில்
அன்று,
உடல்கள்  எல்லாம்  எவ்விடத்தில்
இன்று .............

உள்   நாட்டவர்   உதவினால்
உயிரில்லை
வெளிநாட்டவர்  உதவியிலும்
வெளிச்சமில்லை............

எம்  பூர்வ  ஜென்ம
ஊரென்று  கேட்டோம்,
தமிழ்நாடு
உதவவேயில்லை ..................

சிங்களவன்  வந்தான்
சீனன்  வந்தான்
உடலைக்  கேட்டான்
நாங்கள்  உயிரை  விட்டோம் .............



வயதானவரென்றால்  முகாம்
ஆண்களென்றால்  கொலை
பெண்களென்றால்  புணர்ச்சி
இதுதான் இன்று எம் நிலை .............


முன்பு துரத்தினர்,பிடுங்கினர்
பின்பு அடித்தனர்,கொன்றனர்
கூட்டமாய் அடைத்தனர்
சலிப்படைந்தனர் போலும்................

மொத்தத்தில் முற்றிலும்
புதிதாய் யோசித்தனர்
அனைவரையும் புணர்ந்தனர்
தலைமுறையை தடம் மாற்றினர்....................

தமிழச்சி வயிற்றில் சீனன் குழந்தை
தமிழச்சி வயிற்றில் சிங்களவன் குழந்தை
தமிழ்ச் சீன,தமிழ் சிங்கள
கலப்பை கண்டறிந்தனர் .................



தமிழ் மரபை அளிக்க
ஒடுக்க,மறைக்க
புதியதோர் போர்முறையாம்
புதியதோர் தந்திரமாம்................ 

இன்னும் இன்னும்
எம்மக்கள் படும்பாடு
சொல்லவே முடியாது
சொன்னாலும் தீராது.........

உதவிக்களைக்கவும்  ஒருவருமில்லை
எம் தலைவனும் எம்மிடமில்லை
திரைப்படம்தான்
முக்கியமாம்
தங்கத் தமிழ்நாட்டிற்கு..............

மீண்டும் வீறு கொண்டேளுவோம்
அனைவரும் இறந்தாலும்
இறவாமல் காப்போம்
யாம் கொண்ட தமிழை...........

எங்கள் சிதையிலும்
பாதி  உயிருண்டு
அவை கொண்டு இனம்  காப்போம்
மீதி உயிர் காப்போம் .................



என்னுயிர் போனாலும்
மானம்  காத்திட மக்களுண்டு
பயந்திடப் பயமெதற்கு
பயந்தால் ஜெயமேதற்கு...........


போகிறேன் நான் வீர மங்கையாய் ...........

No comments:

Post a Comment