Saturday, November 27, 2010

செம்மொழியான தமிழ் மொழியே......

       தற்காலத்தில் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு நம் தமிழுக்கும் உண்டு.தமிழ்நாட்டில் 7 கோடி பேர் உள்ளனர்.அதில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் 6 கோடி பேராவது இருப்பார்கள்.அப்புறம் எப்படி தமிழ் அழியும் என்று நினைப்பவர்களுக்கு,நாம் தற்போது பேசிகொண்டிருப்பது தமிழ் அல்ல.தமிங்க்லிஷ் எனும் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும் புது மொழி.50 வருங்களுக்கு முன்பு இருவர் பேசினால் அதில் ஆங்கில வார்த்தைகளை தேட வேண்டும்.இப்போது யாராவது பேசினால் தமிழ் வார்த்தைகளை தேட வேண்டி உள்ளது.கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் தமிழை விழுங்கி கொண்டிருக்கிறது.பல வார்த்தைகளை இழந்து,புது வார்த்தைகளுக்காக அயல் மொழியை நாடி சென்று கொண்டிருக்கிறது தமிழ்.தமிழ்நாட்டில் தமிழோ அல்லது வேறு மொழியோ எழுத படிக்க தெரியாதவர்க்கு கூட ஆங்கிலத்தில் சர்வ சாதாரணமாக 100 அல்லது 200 வார்த்தைகள் தெரியும்.பஸ்,போன்,கார்,டிக்கெட்,சினிமா,ரோடு போன்ற பல வார்த்தைகள் இன்று தமிழ் வார்த்தைகள் ஆகி விட்டன.உண்மையில் பல பேர்களுக்கு பல ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தம் தெரியாது.தமிழ் பேச இன்று உள்ள இளம் தலைமுறையினர்க்கு தயக்கம்,வெட்கம்,கூச்சம்.நன்றி என்று தமிழில் சொல்ல கசக்கிறது.அதே சமயம் தேங்க்ஸ் எனும் போது இனிக்கிறது.இதுதான் இன்றைய நிலை.2000 ஆண்டு  பாரம்பரியம் உள்ள ஒரு மொழி 200 வருட பாரம்பரியம் உள்ள மொழியிடம் அடிமையாக உள்ளது.உண்மையில் தமிழர்களின் ஊரான தமிழ்நாட்டை விட ஸ்ரீலங்கா,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
                                            தமிழர்கள் சற்று அதிகமாகவே தாழ்வு மனப்பான்மையும்,அடிமை மனப்பான்மையும் கொண்டவர்கள்.ஆகவே ஆங்கிலத்தின் மேல் மோகம் கொண்டதில் வியப்பு இல்லை.ஆங்கிலேயர்கள் நமக்கு விடுதலையை கொடுப்பது போல் கொடுத்து நம்மை இன்னும் அதிகமாக அடிமை படுத்தி கொண்டார்கள்.ஒரு பொருளை கொடுத்து அதை உபயோகப்படுத்த பழக்கி விட்டு,திடீர் என்று அதை பிடுங்கி விட்டால் எப்படி இருக்கும்.அதை போலேவே ஆங்கிலத்தையும் நமக்கு பழக்க படுத்தி விட்டார்கள்.உண்மையில் அவர்களுடையதை விட நம் பொருள் மேலானது என்று தெரியாமல் நாமும் அதற்க்கு அடிமையாகி விட்டோம்.எவன் ஒருவன் தன சொந்த தாய்மொழியை புறக்கணிக்கின்றானோ,அவன் அனாதைக்கு சமம்.ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?.நமது தாய்மொழியை நம்மை விட அதிகமாக உபயோகப்படுதுபவர்களும்,காப்பவர்களும் அயல் மொழியினரே.நம் தமிழின் பெருமை ஆங்கிலேயர்களும்,ஐரோப்பியர்களும் சொல்லித்தான் நாமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் பல வெளிநாட்டவர்களும் பேசியதில் இருந்துதான் நம் மக்கள் நம் மொழியை பற்றிய பல விசயங்களை அறிந்து கொண்டிருப்பார்கள்.அடுத்தவர் சொல்லித்தான் நம் மொழியை பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ளுவது மிக பெரிய கொடுமை.மிக சாதாரணமான சில விசயங்கள் கூட இன்றைய தலைமுறையினர் தமது மொழியை பற்றி அறிந்து கொள்வது இல்லை.அப்படியே மீறி தமிழ் தெரிந்தாலும் அதில் ஆயிரம் தவறுகள்.இன்று பல பள்ளிகளும் தமிழை கற்பிப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை.அப்படியே நல்ல பள்ளிகள் இருந்தாலும் அதில் யாரும் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது இல்லை.ஏனென்றால் அவர்களை பொறுத்த வரையில் தமிழ் பள்ளிகள் தரம் குறைந்தவை,ஆங்கிலம் மற்றும் தமிழை தவிர வேறு மொழிகளை சொல்லி தரும் பள்ளிகளே சிறந்தவை என்ற நினைப்பு.தாய்மொழியை நன்றாக அறியாமல் எந்த மொழியையும் கற்பது வீண்.தன் தாய்மொழியை நன்கு கற்று கொண்ட ஒருவரால் எந்த மொழியையும் மிக எளிதாக கற்று தேற முடியும்.
                           இன்றிருக்கும் பல பள்ளிகள் தமிழையும் சரிவர கற்று தராமல் மற்ற மொழிகளையும் சரிவர கற்று தராமல் மாணவர்களை அரைகுறை ஆக்கி கொண்டிருக்கின்றன.ஆங்கில வழி பள்ளியில் படித்த முக்கால் சதவிகிதம் பேர் தமிழும் அரைகுறையாய் ஆங்கிலமும் அரைகுறையாய் தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் கவலையில்லை,ஏனென்றால் தமிழ் நாட்டில்தான் தமிழே தெரியாமல் ஒருவர் பிறந்தது முதல் இறப்பது வரை வாழ முடியுமே,அப்புறம் எதற்கு கவலை.தமிழ் படிப்பதெல்லாம் சுத்த வீண்,தமிழ் படித்தாலோ,தமிழில் படித்தாலோ தங்கள் வாழ்க்கை சிறக்காதென்றும்,வேலைவாய்ப்பு கேள்வி குறி ஆகி விடுமோ என்ற பயமும்,தயக்கமும் இன்றைய இளைங்கர்கள்  மனதில் உள்ளது.ஒருவர் தமிழில் படிக்க ஆசைபட்டாலும்,சுற்றியிருப்போர் அவரிடம் ஏதேனும் ஒன்றை சொல்லி அச்சமுற செய்து விடுகின்றனர்.தற்போதைய அரசு தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க படும் என்ற சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது.நல்ல சட்டம் தான்.ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப்படும் என்பது போக போகதான் தெரியும்.அப்படி இச்சட்டம் சிறப்பாக செயல் படுத்தப்பட்டாலும் இது அடுத்த ஆட்சியிலும் நடைமுறை படுத்த பட வேண்டும்.அப்போதுதான் இந்த சட்டத்தை இயற்றியதற்கு சிறப்பு.இது ஒரு பக்கம் இருந்தாலும்,தமிழ்நாட்டில் தமிழ் வழி படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,வேலைவாய்ப்பு அளிக்கப்படும்,என்ற ஒரு சட்டமே கேலிக்குரியதாக உள்ளது.
                                                                                                             ஏன் இந்த சட்டம்?.தமிழ் நாட்டில் தமிழ் படிக்க ஆட்களே இல்லையா?.உண்மையில் தமிழ் வழி கல்வி கற்றோர் சொற்ப எண்ணிக்கையில் தன உள்ளனர்.பள்ளி இறுதி வரை தமிழ் வழி கல்வி பயின்றோரும்,கல்லூரியில் ஆங்கில வழி கல்வியைத்தான் நாடுகின்றனர்.இதனால் இத்தனை நாள் தமிழ் வழியில் கற்றோர் திடீரென்று அனைத்தையும் ஆங்கிலம் வழி கற்கும் போது குழம்பி போய் விடுகின்றனர்.அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் போது பெயரளவிற்குத்தான் பட்டமே ஒழிய அவர்கள் தாங்கள் பயின்றதில் முழு அளவில் ஞானம் பெறுவதில்லை.இத்தகையோரை எந்த நிறுவனமும் வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்புவதில்லை.இதை போல் பல காரணங்கள் உண்டு.ஆனாலும் நல்லபடியாக படித்து முடித்து வருவோருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதில்லை.தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருவர் தன் சொந்த தாய்மொழியை படித்த காரணத்தினால் வேலையில்லாமல் இருக்க நேரிடும்.இது உண்மையிலேயே வேதனைக்குரிய விசயமாகும்.
                                                           இதுவரை நடந்தது எப்படியோ இருக்கட்டும்.இனி வரும் காலங்களிலாவது நம் மொழியை காப்போம்.மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற வாக்கை பொய்யாக்குவோம்.வரும் தலைமுறைக்காவது நல்ல தமிழை சொல்லி தருவோம்.நம் தாய்மொழியை நாமே போற்றா விட்டால் யார் போற்றுவார்.ஆகவே கற்போம் கற்பிப்போம் தமிழை.
                                      வெல்க தமிழ்,வாழ்க தமிழ்,வளர்க தமிழ்.....


                                            

No comments:

Post a Comment