Tuesday, November 30, 2010

''சாமி அய்யப்பனும் வ குவாட்டர் கட்டிங்கும்''.............!!!!!!!

சாந்த சொருபீயாக,புலி வாகனத்தில்...
                          முதலில் தலைப்பிற்கு வருவதற்கு முன் ஐயப்பன் மற்றும் மாலை அணிவது போன்ற சில விசயங்களை பார்ப்போம்.முன்பு ஒரு காலத்தில் சபரிமலை ஒரு சாதாரண சிறிய கோவிலாகவே இருந்தது.அதிகமாக கேரளத்தில் வசிக்கும் மலையாள மக்களே விரதம் இருந்து மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர்.அப்போதும் கேரளத்தை தவிர வேறு பல ஊர்களில் இருந்தும் மாலையணிந்து வந்தனர்.நாட்கள் செல்ல செல்ல அங்கு சென்று வந்தோர் வாயிலாகவும்,சக்தி வாய்ந்த சுவாமி ஐயப்பன் என்று பலர் சொன்னதாலும்,மற்ற மீடியாக்களின் மூலமாகவும்,ஐயப்பனின் புகழ் அருகிலுள்ள பல மாநிலங்களுக்கும் பரவியது.முக்கியமாக கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பரவியது.தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானோர் சபரி மலைக்கு மாலையணிய ஆரம்பித்தனர்.1985 இருந்து 1995 வரை இப்போது நாம் கேட்கும் பல புகழ் பெற்ற அய்யப்ப பக்தி பாடல்கள் வெளி வந்தன.ஐயப்பன் பாடல்களை பாடியே பிரபலமானவர் வீரமணி.இவர் பாடல்களுக்கு ஐயப்பனே பக்தர்களின் உடலில் வந்தததை போல ஆடுவார்கள்.ஐயப்பன் தான் விட்ட அம்பு எங்கு சென்று விழுகிறதோ,அங்கு நான் கோவில் கொள்வேன் என்று சொல்லி விட்ட அம்பு சபரிமலையில் விழுந்தது.சொன்னது போலவே அய்யப்பனும் இன்று வரை அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டிருக்கிறார்.வாகனமாய் புலியை கொண்டு கையில் வில் அம்புடன் சாந்தமாக தோற்றம் தரும் ஐயப்பன் ஒரு தீவிர பிரம்மச்சாரி ஆவார்.கோவிலில் தன் முழங்கால்கள் நெஞ்சுக்கு நேராக  இருக்குமாறு,தன் கைகள் இரண்டையும் முழங்கால்களின் மேல் வைத்து ஆசி தரும் நிலையில் இருப்பார்.இவரின் முக்கியமான ஒரு விஷயம்,பிரம்மச்சரியம்.அய்யப்பனிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொன்ன போது,எப்போது என் கோவிலுக்கு கன்னி சாமிகள்(முதல் முறையாக மாலையணிபவர்) வராது போகிறார்களோ அப்போது என் பிரம்மச்சரியம் களைந்து திருமணம் செய்வேன் என்றார்.தற்போது உள்ள நிலையில் அது நடப்பது மிகவும் கடினமே.ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் புதிதாக மாலை அணிந்து கன்னி சாமியாக சபரி மலை செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் வருகிறது.எனவே ஐயப்பனின் சபதம் நிறைவேறுவது கடினம்.
                                                                       மேலும் காலம் ஆக ஆக அய்யபனது புகழ் விஸ்வ ரூபம் எடுக்கத் தொடங்கியது.தற்போது மேற்கு வங்காளம்,பீகார்,ஒரிசா,ம பி,யு பி மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஐயப்பனை தரிசிக்க படையெடுத்து வருகின்றனர்.இப்படி புகழ்,மக்கள் கூட்டம் என அதிகரித்த ஐயப்பன் கோவில் அதன் மூலம் பெரிதும் ஆனது.ஐயப்பனை வருடம் முழுவதும் தரிசிக்கலாம் என்றாலும்,விரதமிருந்து மாலையிட்டு தரிசிக்க செல்ல கார்த்திகை மாதமே மிகவும் சிறந்த மாதமாகும்.இம்மாதத்தில் தான் அனைவரும் கூட்டம் கூட்டமாக சென்று தரிசிப்பர்.சாதரணமாக தரிசிக்க முடியாது.நாற்பது நாட்கள் விரதமிருந்து,இருமுடி கட்டி செல்ல வேண்டும்.ஐயப்பனை தரிசிக்க சிலபல விதிமுறைகள் உண்டு.மாலையணிந்து விரதமிருப்போர் காலில் செருப்பணிய கூடாது,இரவில் வெறும் தரையில்தான் உறங்க வேண்டும்,தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்,விரதமிருக்கும் நாட்களில் பெண்களை மனதால் கூட நினைக்க கூடாது,அதாவது பிரம்மச்சரியம் கடைபிடித்தால்,கெட்ட வார்த்தைகளை பேசுவது கூடாது,தீய பழக்கங்களை செய்யக் கூடாது என்பது போன்று பல கட்டுபாடுகள் உண்டு.இந்த கட்டுபாடுகள் அனைத்திற்கும் காரணமும் உண்டு.ஐயப்பனை தரிசிக்க செல்லும் உங்கள் உடலினையும்,மனதினையும் உறுதி செய்யவே இத்தகைய கட்டுபாடுகள்.உடல்,மன கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் மட்டுமே ஐயனை தரிசிக்க முடியும்.
பம்பை ஆறு
                 இந்த ஒவ்வொரு கட்டுப்படும் எதற்கு,வெறும் தரையில் ஏன் படுக்க வேண்டும்?.நீங்கள் ஐயப்பனை தரிசிக்க செல்லும் இடம் கோவில் அமைந்துள்ள இடம் கரடு முரடான ஒரு மலை.நீங்கள் இருமுடி கட்டி மலையில் அய்யப்ப தரிசனத்திற்கு  செல்லும் போது வழியில் ஓய்வெடுக்க வேண்டுமென்றால் கரடு முரடான மலைப்பாதையில்தான் தங்க வேண்டும்.அப்போது உங்கள் உடல் அந்த சூழ்நிலையை தாங்கும் வலிமை வேண்டும் என்பதற்காவே தான் வெறும் தரையில் உறங்குவது.உங்கள் கால்கள் கரடு முரடான பாதையை தாங்க வேண்டும் என்பதற்காவே தான் நீங்கள் விரத நாட்களில் வெறும் காலில் நடப்பது,மேலும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஏன்?..ஐயனை காண செல்லும் இந்த கார்த்திகை மாதம் குளிர் காலமாகும்.அங்கு சபரிமலையில் நீங்கள் பம்பை ஆற்றில் குளிக்க இறங்கும் போது தண்ணீர் ஐஸ் கட்டியை போல இருக்கும்.அதை  தாங்குவதற்கு தினமும் அதிகாலை குளிர்ந்த நீராடல்.இப்படி ஒவ்வொரு விதிகளும் பக்தர்களின் மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டையும் உறுதியையும் வலுப் பெறச் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டன.இந்த வகைகளில் எல்லாம் கட்டுபாட்டுடன் இருந்து அய்யன் தரிசனம் செய்வோர் வாழ்வில் மங்கலம் உண்டாகும் என்பது அய்யப்ப பக்தர்களின் கருத்து.
                                                                 ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன?.நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் தெரியும்.இல்லையென்றால் சும்மாவேனும் டாஸ்மாக் பாருக்கு சென்று பாருங்கள்.''சாமிக்கு தனி கிளாஸ் குடு'' என்ற சத்தம் ஒலிக்காத பார் தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் கிடைக்காது.தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மறைந்து பய உணர்வு மறைந்து சாமிகள் அனைவரும் வெளிப்படையாக அனைத்தையும் செய்கிறார்கள்.இப்போதெல்லாம் மாலை போடுவது என்பது பாஷன் ஆகி விட்டது.ஜீன்ஸ் அணிவது போல்,புதிதாக வரும் ஸ்டைல் கலை பின்பற்றுவது போல்.எல்லோரும் மாலை போடுகிறார்கள்,நானும் விட்டேனா பார் என்று கண்ட ஜென்மங்கள் எல்லாம் மாலை அணிந்து தெருவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இவர்கள் மாலை அணிந்த தோற்றத்துடனேயே பீடி,சிகரெட்,பாக்கு,மது என்று எல்லா வித போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி,உண்மையான அய்யப்ப பக்தர்களையும் சேர்த்து அவமதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.இவர்களுக்கு மாலை போடுவது என்பது ஒரு பொழுதுபோக்கு,ஸ்டைல்....இப்படிப்பட்ட ஜன்மங்களை எல்லாம் ஐயப்பனின் வாகனமான புலியை விட்டு கடிக்க செய்ய வேண்டும்.அய்யப்ப மாலை அணிவதே அணைத்து விதமான கேட்ட பழக்கங்களையும் கைவிட்டு திருந்துவதற்கு,அப்படி இருக்கும் போது எந்த வித மன உறுதியுமே இல்லாத இந்த நபர்கள் ஏன் மாலை அணிந்து அவர்கள் பேரையும்,ஐயப்பன் பேரையும்,உண்மையான பக்தர்கள் பேரையும் கெடுக்க வேண்டும்.கெட்ட பழக்கங்களை விட மன உடல் உறுதி இல்லாதவர்களான இவர்கள்,மாலை அணிந்தால் மட்டும் அய்யப்பனகாவே மாறியா விடப் போகிறார்கள்?.மாலை போட்டாலும் அணைத்து கெட்ட பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.முதலில் மாலை அணிந்திருக்கும் போது பீடியையே ஒளிந்து ஒளிந்து பிடித்து கொண்டிருந்தவர்கள் காலம் செல்ல செல்ல பகலிலேயே பாரில் ஸ்பெசல் டம்ளரில் சரக்கை ராவாக அடித்து கொண்டிருக்கிறார்கள்.இன்னும் அதற்கும் ஒரு படி மேலே போய் பெண்களை அரவனைப்பவர்களும் உண்டு.அந்த சமயத்தில் மட்டும் மாலையை கழற்றி விட்டு தப்பை செய்து முடித்த பின்,இம்மாதிரி தப்பை செயபவர்களுக்கேன்றே உருவாக்கப்பட்ட வாக்கியமான ''அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த தவறை மறந்து மன்னித்து விடு ஸ்வாமியே'' என்றதை ஒரு தடவை ஓதி விட்டு மறுபடியும் மாலையை அணிந்து கொள்கிறார்கள்.இப்போது கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் நடந்து வருவதால் எங்கெங்கு காணினும் அய்யப்ப சாமியடா என்பது போல் எல்லா பாருக்குள்ளும் கூட சாமியடா என்றும் சொல்லலாம்.குடிப்பதே மது.......இதில் தனி ஸ்பெசல் கிளாஸ்  '''தூத் தேறி'' .....
                                                                மாலையையும் போட்டு கொண்டு இந்த கருமங்களையும் தொடர்ந்து செய்வதற்கு பதில்...மாலை அணியாமலே இருந்து விடலாம்..மாலை அணிவதால் மட்டும் என்ன புண்ணியம் இவர்களுக்கு கிடைத்து விடப் போகிறது...இவர்கள் எல்லாம்  ஐயப்பன் சந்நிதானத்தில் உள்ள பதினெட்டு படி ஏறவே தகுதி இல்லாதவர்கள்.இவர்கள் செய்யும் இந்த காரியத்தால் அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் அவபெயரை உண்டாக்குகிறார்கள் இந்த கழிசடைகள்..பலர் மாலை போட்டு கொண்டு இவைகளை செய்வதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.அனைவரின் முன்பும் மாலை அணிந்த தோற்றத்துடன் பாரில் அமர்ந்து சரக்கடித்து கொண்டும்,பேசக் கூடாதவைகளை பேசிக்கொண்டும்,செய்யக் கூடாதவைகளை செய்து கொண்டும்
இருக்கும் இவர்களால் அய்யப்பனுக்கு என்ன லாபம்?.மேலும் பலர் எப்படா சபரிமலைக்கு போயிட்டு வந்து மாலைய கழட்டீட்டு தண்ணி அடிப்போம் என்று ஐயனை தரிசிப்பதை விட பிராந்தியை தரிசிப்பதற்கு ஆவலாய் இருப்பார்கள்.
                                                                           எதற்கு இவர்கள் வெட்டி பந்தாவுக்காக மாலை அணிந்து தேவையில்லாமல் காசை செலவு செய்து சபரிமலை சென்று கொண்டு?அதற்க்கு பேசாமல் இங்கேயே எப்போதும் போல் ஜாலியாக சரக்கடித்துக் கொண்டும்,ஊர் சுற்றிக் கொண்டும் இருக்கலாமே?.இம்மாதிரி ஆட்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது.மேலும் கோவிலிலும் கூட்டமாவது குறையும்.உண்மையான பக்தர்கள் நிம்மதியாக நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வார்கள்.கன்னி சாமிகள் வரத்து குறையும்.அய்யப்பனும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் அல்லவா?.அய்யப்பனிடமும் இந்த மாதிரி போலி பக்தர்கள் அதிகரித்திருப்பது வேதனைக்குரியது.மேலும் இது ஐயப்பனுக்கும்,சபரி மலைக்குமே மிகப் பெரியதொரு அவமானமாகும்.இந்த கடவுள் இப்படித்தான்,இவருக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு,என்று இருக்கும் போது அவைகளை எதையுமே மதிக்காமல் கோவிலுக்கு மட்டும் வருவேன் என்றால் அப்புறம் எதற்கு கட்டுப்பாடு,விதி முறைகள்,சடங்குகள்.பேசாமல் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டு அப்படியே கோவிலையும் இழுத்து மூடி விட்டு போய் விடலாம்.இப்படி பட்ட போலி பக்தர்கள் பெருகி வரும் இந்த வேலையில்,இதை இப்படியே விட்டால் நாளை ஐயப்பனுக்கும் ஒரு கட்டிங் ஏற்றி விட்டு ''வ குவாட்டர் கட்டிங்'' படத்திற்கு இரண்டாம் ஆட்டத்திற்கு அழைத்து போவார்கள் இந்த புண்ணிய வான்கள்.
                                                                 இதை இப்படியே விட்டு விட்டால் நாளை அய்யப்ப பக்தர்கள் என்றாலே காறித்துப்பும் நிலை ஏற்பட்டு விடும்,அய்யப்ப மாலை அணிந்தோர் என்றாலே அவர்கள் விரதமிருந்து மாலை அணிந்திருக்கும் போதே தண்ணி அடிப்பவர்கள்,அனைத்து விதமான கெட்ட காரியங்களையும் செய்பவர்கள் என்றாகி விடும்.ஆகவே அரசாங்கமோ அல்லது கோவில் நிர்வாகத்தரோ இதற்கு ஏதேனும் ஒரு வழியை கண்டு பிடித்து அனைத்து உண்மையான அய்யப்ப பக்தர்கள் மனதிலும் பாலை வார்ப்பார்களாக.....இதை நிறைவேற்றுவோருக்கு ஐயப்பனின் ஆசீர்வாதமும்,மற்றும் பக்தர்களின் ஆதரவும் பெருக வேண்டுமென உண்மையான அய்யப்ப பக்தர்களின் சார்பிலும்,மாலை அணிந்திருக்கும் என் நண்பர்கள் கேட்டு கொண்டதற்கினங்கவும் இதை எழுதுகிறேன்...
பதினெட்டு படி
                             நாற்பது நாட்கள் கூட கெட்ட பழக்கங்களை விட முடியாதவர்களுக்கு மாலை எதற்கு?,சபரிமலை எதற்கு?,அய்யப்ப தரிசனம் எதற்கு?.நாற்பது நாட்கள் கெட்ட பழக்கங்களை விட்டு விரதமிருக்கும் நபர்கள் அந்த நாற்பது நாட்களுக்கு பின் அந்த தீய பழக்கங்களை விட்டு விடும் மன உறுதி அடைகின்றனர்.அதற்காகவே ஏற்பட்டது தான் இந்த கட்டுப்பாடு.நாற்பது நாட்கள் கழிந்து தங்களிடமுள்ள கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விட்டவர்கள் உண்டு..மாலையணிந்த நிலையிலேயே சரக்கடித்து ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள் அநேகம்.இதைக் கண்டு முகம் சுளித்து செல்பவர்கள் நிறைய பேர் உண்டு.ஒவ்வொரு அய்யப்ப சீசனிலும் இதை நீங்கள் காணலாம்.இந்த சீசனில் நான் தினமும் மூன்று அல்லது நான்கு பேரை தினமும் சாலையில் காண்கிறேன்.இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுமா? அல்லது வேறு மாநிலங்களிலும் உண்ட என்பது தெரியவில்லை.அனேகமாக இது தமிழ்நாட்டில்தான் அதிகம் என நினைக்கிறேன்.இந்நிலை தொடர்ந்தால் நாளை கேரளத்தில் அனைத்து சேட்டன்மார்களும் நம்மை கோவிலை விட்டு வெளியே போடா பட்டி என்பார்கள்.ஆகவே இந்த நிலை தொடராதிருக்க மன,உடல் கட்டுப்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து மாலை அணிய வேண்டாம்.அப்படி நீங்கள் மாலை அணிந்தாலும் அது அதற்க்குண்டான பலனை பெறாது..மேலும் இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தாங்கள் தெரிந்தவர்களிடமோ,நண்பர்களிடமோ இதை சொல்லினால் அவர்களுக்கு விரதமிருந்து,நாற்பது நாட்கள் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கும் உண்மையான பக்தர்களின் பலனை அடைய அய்யப்பன் அருள் புரிவாராக.

1 comment:

  1. Thanks for your message. I use to go to sabari mala every year , also i use to smoke even o deeksha time, NOW I FEEL ASHAMED AND AFRAID TO SMOKE.

    Possibly i will try to control to avoid my habit on that time from this year onwards.

    By
    Narayanan

    ReplyDelete